• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

சாத்தூர் வைப்பாற்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி மாயமான சிறுவன் உடல் மீட்பு

Byகிஷோர்

Dec 10, 2021

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் காட்டுபுதுத் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் என்பவர். சாத்தூர் நகராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவரது 3வது மகன் ஹரிஹர பிரபு (14).

சிறுவன் ஹரிஹர பிரபு நேற்று காலை வீட்டின் அருகே இருக்கும் வைப்பாற்றுக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். ஆற்றுக்குள் இறங்கி குளித்து கொண்டு இருந்த போது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளான். அப்போது ஆற்றில் செல்லும் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளான். இதனைக் கண்ட நண்பர்கள் கூச்சலிட அருகிலுருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் பல மணி நேரம் ஆற்று பகுதி முழுவதும் தேடியுள்ளனர்.

ஆற்றில் வெள்ளம் செல்வதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இரவு வரை உடலை தேடும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. எனினும் சிறுவனின் உடல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை சிறுவன் ஹரிஹரன் உடல் ஆற்றின் கரையோரம் இருந்த முள் புதரில் சிக்கி பிணமாக மிதந்தது தெரியவந்தது. உடனடியாக தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஹரிஹரன் உடலை கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சாத்தூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆற்றில் விழுந்து 24 மணி நேரத்திற்கு பின் பினமாக சிறுவனின் உடலை மீட்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காவல்துறை மற்றும் நகராட்சி சார்பில் ஆற்றில் வெள்ளம் செல்வதால் குளிப்பதோ, அப்பகுதிக்கு செல்வதோ கூடாது என்று தொடர்ந்து அறிவுறுத்தியும் இவ்வாறு சிறுவர்கள் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கச் சென்று வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படுவது வாடிக்கையாக உள்ளது.