இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பிறந்த ஆண் குழந்தைக்கு பெற்றோர் ‘பார்டர்’ எனப் பெயர் சூட்டியுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தம்பதி பலம்ராம், நிம்பு பாய். நிம்புபாய் கர்ப்பமாக இருந்த சமயத்தில், இவர்கள் வாழ்ந்த பகுதியில் இருந்து 98 பேர் இந்தியாவில் உள்ள புனித தலங்களுக்குச் சென்று வழிபடுவதற்காகவும் தங்கள் உறவினர்களை சந்திப்பதற்காகவும் இந்தியா வந்துள்ளனர். புனித தலங்களுக்கு சென்றுவிட்டு கடந்த 2 மாதத்திற்கு முன்னதாக பாகிஸ்தான் திரும்பியுள்ளனர். ஆனால், இந்தியா – பாகிஸ்தான் எல்லையான அட்டாரியில், இவர்களிடம் போதுமான ஆவணங்கள் இல்லை என்று கூறி பாகிஸ்தான் அதிகாரிகள் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
இதனால் எல்லைக்கு அருகே இருந்த கூடாரத்தில் தங்கியுள்ளனர். அவர்களுக்கான உணவு, உடைகளை அப்பகுதியில் உள்ள கிராமத்தினர் கொடுத்து உதவியுள்ளனர். இந்நிலையில் கர்ப்பமான மனைவி நிம்புபாய்க்கு கடந்த 2ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதால், அப்பகுதி கிராமத்தினர் அவருக்கு மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து நிம்புபாய்க்கு ஆண் குழந்தைப் பிறந்தது. அந்தக் குழந்தை இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பிறந்ததால் ‘பார்டர்’ எனப் பெயர் சூட்டியுள்ளனர். இந்த செய்தி தற்போது வைரலாகியுள்ளது.