• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்குபிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

Byவிஷா

Jun 3, 2025

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் இரண்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளை நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டத் திருத்த மசோதாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தற்போது அந்த 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
“தமிழகத்தில் இருக்கும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், அதாவது கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக ஆக்கப்படுகிறார்கள்.
இதன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளுடைய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், சிறப்புரிமைகளையும் சமமாகப் பெறுவதற்கு இந்தச் சட்ட முன்வடிவுகள் வழிவகுக்கும். இது, ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்று இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்துகிற சமூக நீதியை அடைவதற்கான மற்றுமொரு முன்னெடுப்பாகும்.
இதனை நடைமுறைப்படுத்த, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, தமிழ்நாடு நகர்ப்புர ஊராட்சிகள் சட்டம் 1998 ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த மசோதாக்கள் மூலம், மாற்றுத் திறனாளிகள் குரல், உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்துகிற வல்லமை பெற்றவர்களாகத் திகழ்வார்கள்” என பேரவையில் இந்த மசோதாக்களை தாக்கல் செய்த போது முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதன் மூலமாக 650 மாற்றுத் திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத் திறனாளிகள் கிராமப் பஞ்சாயத்துக்களிலும், 388 மாற்றுத் திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத் திறனாளிகளும் நியமிக்கப்படுவர். தற்போது இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
முன்னதாக, துறைகளுக்கான நிதி ஒதுக்கம், மானிய கோரிக்கைகள் உட்பட நிதி தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மே மாதம் ஒப்புதல் அளித்திருந்தார்.
கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் உருவாக்குவது, நிதி நிறுவனங்களின் வலுக்கட்டாய கடன் வசூல் நடவடிக்கைகளில் இருந்து மக்களை பாதுகாப்பது, தமிழ்நாடு கல்வியியல், விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பது – நீக்குவதற்கான அதிகாரத்தை அரசுக்கு வழங்குவது, மின்தூக்கிகள், நகரும் மின் படிக்கட்டுகளுக்கு ஆன்லைனில் உரிமம் வழங்குவது, அறிவியல் சார் நில வரைபட அடிப்படையில் தீயணைப்பு நிலையங்களை அமைப்பது தொடர்பான தீயணைப்பு சட்ட திருத்த மசோதா, அனுமதியின்றி உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டுவோரை தண்டிக்கும் சட்ட மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் தற்போது ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.