• Fri. Feb 27th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து அரசாணை வெளியீடு

Byமதி

Dec 4, 2021

பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் போது பணியாற்றிய செய்தியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்த தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும், கொரோனா காலகட்டத்தில் பணியாற்றி உயிரிழந்த செய்தியாளர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையும் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பணியாற்றிவரும் பத்திரிகையாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

கடந்த செப்.,9ம் தேதி நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின்போது, உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அளித்திடும் வகையில், ‘பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது. அதனை செயல்படுத்தும் விதமாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நலிவுற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஏனைய பிற நலத்திட்ட உதவிகளுடன், அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கருக்கலைப்பு / கருச்சிதைவு உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் நலவாரியத்தின் மூலம் வழங்க இந்த அரசாணை வழிவகை செய்கிறது.