விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கனமழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உயிரிழந்தவரின் சடலத்தை இடுப்பளவு தண்ணீரில் சுமந்து வந்து அடக்கம் செய்தனர் கிராம மக்கள்.
அருப்புக்கோட்டை அருகே நரிக்குடி ஒன்றியம் உலக்குடி கிராமத்தில் வைகை அணை திறப்பு மற்றும் கனமழை காரணமாக கிருதுமால் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் உலக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட திருமாணிக்கனேந்தல் கிராமத்த்தை சேர்ந்த பாலாயி (வயது 75) என்பவர் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலத்தை உலக்குடி சுடுகாட்டில் அடக்கம் செய்வதற்காக கிருதுமால் நதியை கடந்து வரவேண்டிய சூழ்நிலையில், ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் இறந்துபோன பாலாயின் உடலை இடுப்பளவு நீரில் 30க்கும் மேற்பட்டோர் சுமந்து கொண்டு சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போராடி ஆற்று வெள்ளத்தை கடந்து சடலத்தை கரை சேர்த்தனர்.
பின்னர் ஒருவழியாக பாலாயின் சடலத்தை சுடுகாட்டிற்கு கொண்டுவந்து இறுதிசடங்குடன் அடக்கம் செய்தனர். மேலும் திருமாணிக்கனேந்தல் கிராமப்பொதுமக்கள் நாள்தோறும் உலக்குடி கிராமத்திற்கு வந்துதான் பொருட்கள் வாங்கி செல்வதாகவும், இதுபோன்ற மழைக்காலத்திலும், அணை திறக்கப்படும் சமயத்தில் கிருதுமால் நதியில் வெள்ளம் வரும் நிலையிலும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முழுவதும் பாதிப்படைவதாகவும், எனவே தமிழக அரசு மேற்படி கிருதுமால் நதியின் குறுக்கே பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.