மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழ கள்ளந்திரியைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 60). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனது உறவினரை சந்திப்பதற்காக வாடகை கார் மூலம் கீழ கள்ளந்திரியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்றுள்ளார்.

காரை மதுரை வண்டியூர் யாகப்பா நகரைச் சேர்ந்த மகாராஜன் மகன் சக்திவேல் (வயது 21) என்பவர் ஓட்டி வந்துள்ளார். மதுரை துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் நத்தம் வழியாக பள்ளபட்டி பிரிவு அருகே உள்ள மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது அதி வேகமாக வந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த மின் கம்பத்தில் படு பயங்கரமாக மோதியதில் கார் தலை குப்புற கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்தது.
கார் மோதிய வேகத்தில் மின் கம்பம் வேரோடு சாய்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட இருவரும் காயமடைந்தனர். காயமடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காரில் ஏர்பேக் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.