விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல் குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இதுவரை 22 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதில் ஏராளமான சங்கு வளையல்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட காதணிகள், சுடுமண் முத்திரைகள் ,பண்டைய கால செப்பு காசுகள், தீப விளக்குகள், சுடு மண்ணால் செய்யப்பட்ட சிற்பங்கள், உட்பட 4400 க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்து வருவதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.
மேலும் தங்கத்தால் செய்யப்பட்ட அரிய வகைப் பொருட்களும் கிடைத்துள்ளன. இதில் கூடுதலாக தற்போது தோண்டப்பட்டு வரும் குழியில் 2.04 மீட்டர் ஆழத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி கிடைத்துள்ளது. இந்த மணி 6 மில்லி மீட்டர் சுற்றளவு 4.7 மில்லி மீட்டர் கணமும் 22 மில்லி கிராம் எடை கொண்டதாகவும் உள்ளது. முதல் இரண்டு கட்ட அகழாய்வை காட்டிலும் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்கள் ஏழு கிடைத்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

