‘தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஆசிரியர்களை பள்ளிக்குள் அனுமதிக்க முடியாது. இது மாணவர்களின் பாதுகாப்பு பிரச்சனை என்பதை அவர்கள் உணர வேண்டும்’ என, கேரள அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டபோது ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை ஆசிரியர்கள் பலரும் தடுப்பூசி போடாமல் உள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி கூறியதாவது: “பள்ளிகள் திறக்கும் முன்பு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களுக்கு அரசு தரப்பில் தடுப்பூசி தொடர்பாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இருப்பினும், 5,000க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தாமல் பள்ளிக்கு வந்து செல்வதாக தெரிகிறது.அவர்களை ஊக்குவிக்க முடியாது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என அவர்களை கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க முடியாது. இது மாணவர்களின் பாதுகாப்பு பிரச்னை என்பதை அவர்கள் உணர வேண்டும்” என அவர் கூறினார்.