திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்களை போலவே வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் வேலை செய்து வருகிறார்கள்.
வேலைவாய்ப்பு அதிகமாக இருந்து வருவதால் திருப்பூருக்கு பலரும் வேலை தேடி வருகிறார்கள். இந்நிலையில், கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டன. அதன்பின், தளர்வின் காரணமாக தற்போது செயல்பட்டு வருகின்றன.இதனால், வேலை தேடி வடமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு தொழிலாளர்கள் பலரும் வந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு வருகிறவர்களினால் திருப்பூரில் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், நேற்று வடமாநிலத்திலிருந்து ரயில் மூலம் திருப்பூர் வந்தவர்களுக்கு ரயில் நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.அதில் பீகார் மாநிலம் பாட்னாவிலிருந்து திருவனந்தபுரம் சென்ற ரயில், தன்பாத் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் வந்த 580 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.சில வடமாநிலத்தவர்கள் கொரோனா பரிசோதனைக்கு பயந்து ரயில் தண்டவாளத்தில் குதித்து தப்பி ஓடினர். இதனால், ரயில் நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தப்பி ஓடியவர்களால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.