கடந்த தீபாவளி அன்று பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. பெட்ரோல் மீதான கலால் வரி ரூ 5, டீசல் மீதான கலால் வரி ரூ 10 குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிகத்தில் அதற்கு முன்னரே பெட்ரோல் டீசல் விலையை மாநில அரசு குறைத்து இருந்தது. இருப்பினும் சில கட்சிகள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவேண்டும் என போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால், ‘பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரி இன்னும் அதிகமாக தொடரும் நிலையில், மாநில அரசின் வரியை மேலும் குறைப்பது சாத்தியமில்லை’ என்று தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரியும், கேஸ் சிலிண்டர் விலையை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி சிலிண்டருக்கு 100 ரூபாய் குறைக்கக்கோரியும் நவம்பர் 22 ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதிவரை மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்” என்று அறிவித்துள்ளார்.
மேலும் எந்தெந்த அணியின் சார்பில், எந்த வகை போராட்டங்கள் நடத்தப்படும் என்றும், போராட்டத்தின் பொறுப்பாளர்கள் அடங்கிய பட்டியலின் விபரங்களையும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.