சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு மனிதநேய பயிற்சி மையம் உதவித் தொகை வழங்குகிறது என்று அதன் தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் தலைமையில் இயங்கும் ‘சைதை துரைசாமி மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம்’ என்ற பயிற்சி மையம் கடந்த 2006-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் 1½ லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு
சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உள்பட மத்திய-மாநில அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக மாணவ-மாணவிகள் தங்களுடைய தேர்வுக்கான பயிற்சியை முறையாக மேற்கொள்ள இயலாத சூழ்நிலையும் நிலவி வருகிறது.
இதனால், தொலைக்காட்சி வாயிலாக தொடர்ந்து பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்தநிலையில், சிவில் சர்வீசஸ் தேர்வின் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் நோக்கில் உதவித்தொகை வழங்குகிறது.
அந்தவகையில் தற்போது சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வுக்கான உதவித்தொகை பெற www.mntfreeias.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவல் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகத்தின் தலைவர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.