கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் கூறுகையில், கோவை நகரில் ஒரே மாதத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 23 பேர் ஆளாகியுள்ளனர். மாநகராட்சியின் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் 12 வட்டாரங்களில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு குழுவில் சுகாதாரத்துறை அலுவலர், ஆய்வாளர் என உள்ளனர். இவர்கள், வீடுகள், கம்பெனிகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர் என்றார்.
கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:-
நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் டெங்கு கொசு உற்பத்தியாகும் பகுதிகளை கண்டறிந்து தடுக்கும் வகையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு பணியை மேற்கொண்டு, கொசு உற்பத்திக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்ட நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். வீடுகளுக்கு ரூ.1000 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், கம்பெனிகளுக்கு அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரையும் அபராதம் விதிக்கப்படும்.
எனவே, பொதுமக்கள் வீடுகள், சுற்றுவட்டார பகுதிகளில் கொசு உற்பத்தியாகாத வகையில் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என அவர் கூறினார்.