• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆவின் ஊழியர் தற்கொலை முயற்சி ..மதுரையில் பரபரப்பு

ByKalamegam Viswanathan

Apr 2, 2023

மதுரையில் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆவின் ஊழியர் விஷமருந்தி தற்கொலை முயற்சி அரசு மருத்துவமனையில் அனுமதி.!!
தான் இறந்தால் இறப்பிற்கு பொது மேலாளரே காரணம் என கூறி தற்கொலை கடிதம் எழுதியுள்ளதால் பரபரப்பு.!!
கடந்த 2020- 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சட்டவிதிகளின் படி கூட்டுறவு ஒன்றிய பணியாளர், துணை மேலாளர், டெக்னீசியன், முதுநிலை ஆலை உதவியாளர் என 200க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக தேர்வான ஊழியர்கள் தமிழகம் முழுவதிலும் உள்ள ஆவின் நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
இதில் பணிபுரிந்துவந்த மதுரை, தேனி சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பணிபுரிய கூட 200 பணியாளர்களின் பணி நியமனத்தை முறைகேடு எனக் கூறி பணி நீக்கம் செய்து ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு அந்த பணியிடை நீக்கத்திற்கு இடைக்கால தடையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது .இதனையடுத்து தங்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என கூறி ஆவினில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவருகின்றனர்.இதில் மதுரை ஆவினில் வேலைவாய்ப்பு மூலமாக கடந்த 2020- 2021ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்து பணிபுரிந்த 47 பணியாளர்களை கடந்த 2023 ஜனவரி 4ஆம் தேதி முன் அறிவிப்பு இன்றி முறைகேடு என கூறி ஆவின் நிர்வாகம் பணிநீக்கம் செய்தது.


இது தொடர்பான வழக்கில் பணி நீக்க உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடையாணை பிறப்பித்தது.இந்த நிலையிலும் இதுவரை பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பணி தொடர்பான எந்தவித அறிவிப்போ, பேச்சுவார்த்தையோ இல்லாத நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.இந்த நிலையில் இன்று மதுரை ஆவினில் பணிபுரிந்துவந்து பணிநீக்கம் செய்யப்பட்ட மதுரை மாநகர் புட்டுதோப்புத்தெரு காட்டுநாயக்கன் காலனியை சேர்ந்த மகாலெட்சுமி என்ற பெண் ஊழியர் இன்று மாலை விஷம் அருந்திய நிலையில் ஆவின் பால்பண்ணை மாடியில் ஏறி குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.அப்போது அங்கு இருந்த பாதுகாவலர்கள் அவரை மீட்ட நிலையில் மயங்கிய நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.முன்னதாக பெண் ஊழியர் மகாலெட்சுமி அவர் எழுதியுள்ள தற்கொலை கடிதத்தில் திமுக ஆட்சியில் பழங்குடியின பெண்ணுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு அதிகாரிகளின் அலட்சியத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் தான் பொருளாதார ரீதியாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், தான் இறந்தால் தனது இறப்பிற்கு ஆவின் பொதுமேலாளர் சாந்தி தான் காரணம் என கூறி கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.ஆவினில் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது