நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு சார்பில் ஆதார் அட்டை வழங்கப்பட்டு உள்ளது. ஆதாரை போல, தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்க எண் கொண்ட ‘மக்கள் ஐ.டி.’ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது. .
இதுகுறித்து தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது… தரவுகளின் அடிப்படையிலான அரசு (டேட்டா சென்ட் ரிக் கவர்ன்மெண்ட்) என்பது தி.மு.க. அரசின் முக்கியமான மக்கள் நல செயல் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் ஒரு தரவு சார்ந்த உட்கட்டமைப்பை உருவாக்கி குடிமக்களுக்கு அரசின் திட்டங்கள் எளிய முறையிலும், வெளிப்படையான தன்மையுடனும் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்ய முடியும். மாநிலத்தில் பல்வேறு துறைகள் மூலம் பல நல திட்டங்கள் நடைபெற்று வருகிறது. நலத்திட்டங்களின் தகுதியான பயனாளிகளை முறையாக அடையாளம் காணுவதற்கு ‘மக்கள் ஐ.டி.’ திட்டம் பெரிதும் உதவுவதோடு, தரவுகள் துறைகளுக்கு திட்டமிட மிகுந்த பயனுள்ளதாக அமையும்.
தமிழக மக்கள் எண் எனப்படும் 12 இலக்க எண் மாநிலத்தில் உள்ள பல்வேறு துறைகளுக்கு இடையிலான தொடர்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது. மாநில குடும்ப தரவு தள திட்டம் மற்றும் மக்கள் எண் திட்டம் எந்த விதத்திலும் தற்போது குடிமக்கள் பெற்றுவரும் எந்தவித நலத்திட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் மக்கள் ஐ.டி. ஆதாருக்கு போட்டியானது, ஆதாரை எதிர்ப்பது போல என தவறான தகவல்களை பரப்புகிறார்கள். தரவுகளின் அடிப்படையிலான அரசாக இருப்பது காலத்தின் கட்டாயம். அதற்கான பணிகளின் தொடக்கம் தான் மக்கள் ஐ.டி. திட்டம். எனவே இதிலும் அரசியல் செய்ய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.