இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாடினார்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 307வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. சமீபத்தில் உக்ரைனுக்கு அதிநவீன பேட்ரியாட் வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொறுத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உள்பட மேலும் 1.80 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் ஆயுத உதவியால் போர் தொடந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி இன்று இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். ஜி20 நாடுகளின் தலைமையை இந்தியா ஏற்றுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு ஜெலன்ஸ்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.