தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்ட கைகலா சத்தியநாராயணா இன்று காலை காலமானார்.
கைகலா சத்ய நாராயணாவுக்கு சில மாதங்களுக்கு முன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில், அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.இதையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று (23-ம் தேதி) காலை உயிரிழந்தார். நாளை மகா பிரஸ்தானத்தில் அவருடைய இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
சத்யநாராயணா 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1959-ம் ஆண்டு ‘செப்பை கூத்துரு’ படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். கடைசியாக, 2019-ல் ‘மகரிஷி’ படத்தில் நடித்து இருந்தார்.கமல்ஹாசனின் ‘பஞ்சதந்திரம்’ திரைப்படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கைகலா சத்ய நாராயணா.அதில் இடம்பெற்ற ‘சின்ன கல்லு பெத்த லாபம்’ என்ற வசனம் பிரபலம். ‘பெரியார்’ திரைப்படத்தில் பெரியாரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.