மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் குற்ற செயல்களை தடுக்க ரூபாய் 8 லட்சம் செலவில் 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவு பெற்றது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வங்கிகள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் கிழங்கு மண்டிகள் என பல்வேறு வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் மேட்டுப்பாளையம் நகரப் பகுதியில் வெளியூர்களுக்கு சென்று வரும் வகையில் அரசு பேருந்து நிலையமும் உள்ளன. இதனால் மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தினசரி சுமார் 50,000க்கு மேற்பட்ட மக்கள் வந்து சென்று வருகின்றனர். இதனால் மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் பல்வேறு குற்ற செயல்கள் நடந்து வருகின்றன. இதனிடையே செயின் பறிப்பு, அடிதடி, வாகன திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அதில் ஈடுபட்ட கொள்ளையர்களையும், குற்றவாளிகளையும் பிடிக்க காவல்துறையினருக்கு சிரமமாக இருந்து வந்தது. இதனுடையே தற்போது மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் சார்பில் மொத்தம் 58 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இதனிடையே இன்று மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் சிறுமுகை சாலை முதல் சிராஜ் நகர் நேஷனல் பள்ளி வரை 30 கேமராக்களும், மேட்டுப்பாளையம் பழைய நகராட்சி அலுவலகம் முதல் மீனாட்சி வரை 30 கேமராக்கள் என மொத்தம் 60 கண்காணிப்பு கேமராக்கள் ரூ. 8 லட்சம் மதிப்பில் இன்று பொருத்தப்பட்டு தொடங்கப்பட்டன.
இதற்கான பணிகள் முடிந்து இதனை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோவை உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி, காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள் முருகநாதன், செல்வநாயகம் உள்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர். இதற்கான செலவுகளை என்.எஸ்.வி பூண்டு மண்டி உரிமையாளர் ஆறுமுகம் யு.பி.எல் நிறுவனத்தினர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.