காய்கறி வியாபாரிகளிடமிருந்து கூடுதல் வாடகை கேட்கும் மதுரை மாநகராட்சியின் சட்ட மீறலை கண்டித்து வரும் 7ஆம் தேதி மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தை வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டம் – ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்பு.
மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்கெட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டுவருகின்றன.
ஆந்திரா, மகாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரம் டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இங்கிருந்து மதுரை மட்டுமின்றி ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சில்லறை வியாபாரிகளும், பொதுமக்களும் காய்கறிகள் வாங்கிசெல்கின்றனர்.
இந்நிலையில் மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் வாடகை வசூலிக்கப்படுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு கடை ஒன்றுக்கு மாதம்தோறும் 2ஆயிரம் ரூபாய் வாடகை வசூலிக்கப்பட்ட நிலையில் 2018ஆம் ஆண்டு 5054ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது 6828ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா காலத்தில் உயர்த்தி அறிவித்த 36 மாத வாடகை நிலுவைத் தொகையை ரத்து செய்ய வேண்டும், மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய உத்தரவுபடி கடந்த 2016 முதல் 2017 வரை உயர்த்திய 14 மாத வாடகை நிலுவைத் தொகையை ரத்து செய்ய வேண்டும்.
புதிதாக அமல்படுத்திய நிலுவைத் தொகை, வாடகைக்கு விதிக்கப்படும் அபராத வட்டியை ரத்து செய்ய வேண்டும், வாடகைக்கு விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரிலிருந்து விலக்கு அளிக்கு வேண்டும், மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவுபடி வியாபாரிகளை அழைத்து பேசி வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் நாளை 7ஆம் தேதி முழுநேர கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வியாபாரிகள் சங்கத்தினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதன் மூலமாக மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு வரக்கூடிய ஆயிரம் டன் காய்கறிகள் வரத்து தடைபடும் எனவும், போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் சந்தை முழுவதிலும் எந்தவித அடிப்படை வசதியின்றி இருப்பதோடு, மாடுகள் தொல்லை அதிகமாக இருப்பதாக கூறியும் மாநகராட்சி கண்டுகொள்ளாத நிலையில் இது போன்ற கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளதாக கூறினர்.
இதில் தக்காளி & சீமைக்காய்கறி வியாபாரிகள் சங்கம், மதுரை வாழை இலை கமிஷன் மண்டி உரிமையாளர்கள் சங்கம் ஒருங்கிணைந்த காய்கறி வணிக வளாக வியாபாரிகள் நலச்சங்கம் , தக்காளி காய்கனி அழுகும் மாத வாடகை நலச்சங்கம் உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர்.