முன்னாள் முதல்வர் மறைந்தஎம்.ஜி.ஆர். மற்றும் அவரது மனைவி வி.என்.ஜானகி அம்மையார் ஆகியோருக்கு முழுஉருவ வெண்கலச் சிலைகள் அமைக்கப்படும் என ஓ.பன்னீர்ச்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ….அ.தி.மு.க. நிறுவனரும், மூன்று முறை தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவரும், தமிழக மக்களின் உள்ளங்களில் இன்றளவும் குடி கொண்டிருப்பவருமான ‘பாரத ரத்னா’ எம்.ஜி.ஆரின் மனைவியும், முன்னாள் முதலமைச்சருமான மறைந்த வி.என்.ஜானகி அம்மையாரின் 100-வது பிறந்தநாள் விழா தொடக்கத்தினையொட்டி அவருக்கு என் வணக்கத்தினையும், மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் நலன்களுக்காக அ.தி.மு.க. என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை எம்.ஜி.ஆர். ஆரம்பித்தபோது, சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தை கட்சிக்காக கொடுத்த வள்ளல் ஜானகி அம்மையார். இந்த இடத்தில்தான் தலைமைக்கழகம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை என்ற பெயரில் இன்றளவிலும் செயல்பட்டு வருகிறது.
மேலும் சென்னை, தியாகராய நகரில் எம்.ஜி.ஆரின் நினைவு இல்லத்தில், உரிய அனுமதி பெற்று, எம்.ஜி.ஆர். மற்றும் அவரது மனைவி வி.என்.ஜானகி அம்மையார் ஆகியோருக்கு முழுஉருவ வெண்கலச் சிலைகள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.