கோவை மாவட்டம், வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில், இந்திய சிலம்பம் சங்கம் சார்பாக நடைபெற்ற தேசிய அளவிலான ஆறாவது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இந்திய சிலம்பம் சங்கம் சார்பாக ஆறாவது தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவை வெள்ளகிணறு பகுதியில் உள்ள டான் போஸ்கோ பள்ளியில் நடைபெற்றது. முன்னதாக போட்டிகளின் துவக்க விழா இந்திய சிலம்ப சங்கத்தின் செயலாளர் தியாகு நாகராஜ் தலைமையில் நடைபெற்றது.


இதில் சிறப்பு விருந்தினர்களாக இளைஞர் மக்கள் இயக்கம் தலைவர் சிவ சுரேஷ் மற்றும் இயக்குனர் சிந்து ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்.
இதில் கவுரவ அழைப்பாளராக டாக்டர் பிரபாவதி கலந்து கொண்டார்.
இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வீர்ர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
இதில் குத்துவரிசை, நெடுங்கம்பு வீச்சு, நடுக்கம்பு வீச்சு, மான் கொம்பு, வேல் கம்பு, இரட்டைக் கம்பு, சுருள் வாள், தொடுமுறை கம்பு சண்டை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
4 வயது முதலான பள்ளி மாணவர்கள் துவங்கி கல்லூரி மாணவர்கள் வரை கலந்து கொண்ட இதில் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன.
இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் அசத்தலாக தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்..
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி தலைவர் பாலமுருகன்,செயலாளர் அர்ஜூன், இந்திய சிலம்ப சங்கத்தின் தொழில் நுட்ப இயக்குனர் பாக்கியராஜ், மகளிர் அணி தலைவி சங்கீதா மற்றும் சிவமுருகன், அரவிந்த் ஆகியோர் செய்திருந்தனர்…

இதில் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் அடுத்து கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாக போட்டியின் ஒருங்கிணைப்பாளர் தியாகு நாகராஜ் தெரிவித்தார்.




