பசுமை விடியல் திட்டத்தின் கீழ் 20 ஏக்கர் நிலப்பரப்பில் மரக்கன்று நடும் விழாவை வருவாய்த்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கண்குடியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு மூலம் பசுமை விடியல் திட்டத்தின் கீழ் அரசுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில், மா, கொய்யா, நாவல், தேக்கு போன்ற 10 வகையான மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பங்கேற்று மரக்கன்றுகளை நடும் விழாவை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது: விருதுநகர் மாவட்டம் முழுவதும் பசுமையாக காட்சியளிக்க வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின் உயர்ந்த நோக்கத்தோடு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருக்கண்குடியில் மட்டும் 3000 மரக்கன்றுகள் 20 ஏக்கர் பரப்பளவில் நடபட உள்ளன என்றும், விரைவில் மாவட்டம் முழுவதும் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு மாவட்டமே பசுமையாக காட்சியளிக்கும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராம சுப்பிரமணியன், சாத்தூர் வருவாய் கோட்டாச்சியர் புஷ்பா, சாத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.