சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் தாம்பரம் கிளை சார்பில் 30க்கும் மேற்பட்ட சாதனை பெண்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விழா தாம்பரத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்திய மருத்துவ சங்கம், ஐ.எம்.ஏ. தாம்பரம் கிளை மற்றும் அதன் மகளிர் மருத்துவர்கள் பிரிவு இணைந்து பொன்விழா ஆண்டையும் உலக மகளிர் தினத்தையும் முன்னிட்டு இந்த நிகழ்ச்சியை நடத்தின.
நிகழ்ச்சிக்கு தாம்பரம் கிளை தலைவர் டாக்டர் யசோதா தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக பிரண்ட்லைன் இதழின் ஆசிரியர் வைஸ்னவ் ராய் மற்றும் 2025 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் பெற்ற டாக்டர் ஸ்ருஜனா தேவி கலந்து கொண்டனர்.
அவர்கள் பெண்களின் முன்னேற்றம் மற்றும் பல்வேறு துறைகளில் பெண்கள் சாதித்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து உரையாற்றினர்.
அதனைத் தொடர்ந்து பெண்களின் திறமையை ஊக்குவிக்கும் விதமாக சாதனை பெண்கள் விருதுகள் வழங்கப்பட்டன.

மருத்துவம், கல்வி, தொழில்முனைவோர், துணை மருத்துவ சேவைகள் மற்றும் சமூகத் தலைமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 30க்கும் மேற்பட்ட பெண்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மருத்துவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
பெண்களின் சாதனைகளை பாராட்டும் இந்த நிகழ்ச்சி தாம்பரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.



