திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாகரை ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான கிளாசிக் போலோ எனும் பின்னலாடை நிறுவனம் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது,

இந்த நிறுவனத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் பனியன்கள், உள்ளாடைகள் தயார் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது, இந்த நிலையில் இங்கு வேலை செய்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் பீகார், ஒரிசா, அசாம், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான வெளி மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்,
இந்நிலையில் வங்காளதேசத்தை சேர்ந்த 29 நபர்கள் ஒட்டன்சத்திரம் வாகரை மில்லில் தங்கி வேலை பார்ப்பதாக ஒட்டன்சத்திரம் காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் ஒட்டன்சத்திரம் காவல்துணை கண்காணிப்பாளர் டி.எஸ்.பி கார்த்திகேயன், ஆய்வாளர் தங்கராஜ் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து சென்று சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு வேலை பார்த்து வந்த 29 நபர்களையும் பிடித்து அவர்களின் ஆதார் கார்டு, மற்றும் அவர்களின் முழு விவரங்களை விசாரணை செய்த போது போலியாக ஆதார் கார்டு தயாரித்து தமிழகத்துக்குள் நுழைந்து பணியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இவர்களின் முழு உடல் பரிசோதனைகள், கைரேகை பதிவுகள், உள்ளிட்டவைகளை பதிவு செய்து 29 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒட்டன்சத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பணியாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.