தாம்பரம் போலீஸ் கமிஷனரகம் சார்பில், 26 டிராபிக் மார்ஷல் இருசக்கர வாகனங்கள் துவக்கி வைத்தல் மற்றும் போக்குவரத்து துணை கமிஷனர் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி, குரோம்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் கலந்துகொண்டு, துணை கமிஷனர் அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, டிராபிக் மார்ஷல் இருசக்கர வாகனங்களை துவக்கி வைத்தார். புதியதாக துவக்கி வைக்கப்பட்டுள்ள, டிராபிக் மார்ஷல் இருசக்கர வாகனங்கள், ஜி.எஸ்.டி., ஓ.எம்.ஆர்., இ.சி.ஆர்., ரேடியல் சாலைகள் மற்றும் பிற சாலைகளில் ரோந்து செல்ல பயன்படுத்தப்படும். ஒவ்வொரு வாகனத்திலும் பொது முகவரி அமைப்பு, சைரன், ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு ரோந்து மற்றும் நெரிசலை கட்டுப்படுத்த, போக்குவரத்து மார்ஷல்கள், 8 மணி நேர ஷிப்டுகளில் பணிபுரிவர். நெரிசல் நேரங்களில் அதிக கவனம் செலுத்துவர். நெரிசலை நீக்குதல், விபத்து நடந்த இடத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி, சாலைகளில் பழுதடைந்து நிற்கும் வாகனங்களை அகற்ற உதவுதல், பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு அருகில் சீரான போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்தல் ஆகியவை இவர்களின் பணியாகும்.