• Fri. Mar 29th, 2024

லாரி மோதி தொழிலாளர்கள் 2 பேர் பலி

வடலூரில் லாரி மோதி என்.எல்.சி. தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள்.
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் திருமுருகன்(வயது 45). இவரும், ரோட்டாண்டிக்குப்பத்தை சேர்ந்த சுகுமார்(48) என்பவரும் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் 2-வது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவரும் நேற்று காலை 6 மணிக்கு வழக்கம்போல் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் நெய்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்களுக்கு பின்னால், வடலூர் பார்வதிபுரத்தை சேர்ந்த பிரகாசின் மனைவியும், என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளியுமான சந்திரகலா(38) என்பவர் ராசாக்குப்பத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்து மொபட்டில் நெய்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது வடலூர் அய்யன் ஏரி அருகில் சென்றபோது பெண்ணாடத்தில் இருந்து சிமென்ட் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு கடலூர் நோக்கி வந்த லாரி, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் திருமுருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் படுகாயமடைந்த சுகுமார், சந்திரகலா ஆகிய 2 பேரையும் வடலூர் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்திரகலா பரிதாபமாக இறந்தார். சுகுமார், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *