மதுரை ஈச்சனேரி பேருந்து நிறுத்தம் பகுதியில் முன்னாள் சென்ற டூவீலர் மீது பின்னால் வந்த அரசு பேருந்து மோதி இருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழப்பு.
மதுரை கூடக்கோவில் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் (வயது 21) பார்த்தசாரதி (வயது 18) இவர்கள் இருவரும் கட்டிட வேலைக்காக கூடக்கோவிலில் இருந்து NS-200 இருசக்கர வாகனத்தில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது இன்று காலை கோவில்பட்டியிலிருந்து மதுரைக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு மதுரை-தூத்துக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஓட்டுநர் ராஜசேகர் (வயது 40) பேருந்தை ஓட்டி வந்து கொண்டிருந்தார்.
அப்போது கட்டிட வேலைகளுக்காக முன்னாள் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் சென்ற இருசக்கர வாகனம் மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது லேசாக மோதியுள்ளார். அதில் கட்டுப்பாட்டை இழந்த இளைஞர்கள் சென்ற இருசக்கர வாகனம் ஈச்சனேரி பேருந்து நிறுத்தம் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கோவில்பட்டியிலிருந்து மதுரை வந்த அரசு பேருந்து சாலையில் விழுந்து கிடந்த இளைஞர்கள் மீது ஏறி இறங்கியது. அதில் இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
தொடர்ந்து., விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரை மாநகர போக்குவரத்து குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் உயிரிழந்த இளைஞர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., அரசு பேருந்து ஓட்டுநர் ராஜசேகர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக இறந்து போன முனீஸ்வரன் மற்றும் பார்த்தசாரதியின் உடலை அவரது உறவினர்கள் தரமறுத்து காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .அரசு பேருந்து ஓட்டுனர் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்ததன் பேரில் உடல் காவல்துறையிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது