• Wed. Apr 23rd, 2025

ஒடிசா சட்டசபையில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்

Byவிஷா

Mar 26, 2025

ஒடிசா சட்டசபையில் இருந்து 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் பாஜகவை சேர்ந்த முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையிலான அரசு உள்ளது. நேற்று சட்டசபை கூடியதும் சமீபத்தில் இறந்த எம்.எல்.ஏ தேபேந்திர சர்மாவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பிறகு, சபையின் மையப்பகுதிக்குள் காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தள உறுப்பினர்கள் தனித்தனி கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் கடந்த 9 மாதத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என கோஷமிட்டனர். மேலும் பல்வேறு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் எஸ்.டி, எஸ்.சி மற்றும் ஓ.பி.சி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பி.ஜே.டி. எம்.எல்.ஏக்கள் மாநில அரசிடம் உத்தரவாதம் கோரினர்.
அப்போது தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோஷங்கள் எழுப்பியும். பிஜேடி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒடிசா சபாநாயகர் சுராமா பதேய் ஆர்ப்பாட்டக்காரர்களை தங்கள் இருக்கைகளுக்குத் திரும்புமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. எனவே சபாநாயகர் பல முறை அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார்.
சட்டசபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி ராமச்சந்திர கடாம், சாகர் சரண் தாஸ், சத்யஜித் கோமாங்கோ, அசோக் குமார் தாஸ் உள்ளிட்ட 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை 7 நாட்களுக்கு இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இவ்வாறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்த பஹினிபதி, அரசு மக்களின் குரலை நசுக்குவதாகவும், ஜனநாயக விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.