தூத்துக்குடியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்களிடம் 16 பவுன் செயின்களை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மனைவி ஷீபா ஜோசப் (54), பன்னைவிளையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்த்து வருகிறார். நேற்று பிற்பகலில் மருத்துவமனை செல்வதற்காக கந்தசாமிபுரம் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் செயின் உட்பட 12 பவுன் எடையுள்ள 3 செயின்களை கொத்தாக பறித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சப் இன்ஸ்பெக்டர் சிவராஜா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். பட்டபகலில் நடந்த நகைபறிப்பு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு சம்பவம் தூத்துக்குடி பெரியநாயகிபுரம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் கோவில்ராஜ் மனைவி பெல்ஷியா (34).இவர் நேற்று மாலை கோரம்பள்ளம் மெயின் ரோட்டில் நடந்து சென்ற போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.