

இன்று காலை 6 மணி முதலே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். சென்னையில் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 15 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் எம்ஆர்சி நகர் பகுதியில் உள்ள வேலுமணியின் உறவினர் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான ஒரு இடத்திலும், கோவையில் 35 இடங்களிலும், காஞ்சிபுரத்தில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ்.பி.வேலுமணி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை புகார்களை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் சோதனையில் தொடர்புடையதாக எஸ்.பி வேலுமணி மீதான புகாரில் கேசிபி என்ஜினீயர் உள்ளிட்ட 10 நிறுவனங்கள் மற்றும் 17 பேர் மீது வழக்கு புதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எஸ்.பி வேலுமணி. வேலுமணியின் சகோதரர் அன்பரசன், சந்திரசேகரன், ஆர்.முருகேசன் உள்ளிட்டோர் அடக்கம். இவர்கள் மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முழு விவரங்கள் கிடைத்துள்ளது.
எஃப்ஐஆர் காப்பியில், ஏ-1 குற்றம்சாட்டப்பட்டவர் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஏ-2வாக இணைக்கப்பட்டிருப்பவர் அவரது சகோதரர் அன்பரசன். இவர் செந்தில் அண்ட் கோ ஷேர் ஹோல்டர், ஸ்ரீ மகா கனபதி ஜுவல்லர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பார்ட்னராக உள்ளார். ஏ-3யாக கே.சி.பி. எஞ்சினியர்ஸ் பிரைவேட் லிமிட்டட் நிறுவனம் இணைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக கே.சி.பி. எஞ்சினியர்ஸ் பிரைவேட் லிமிட்டெட், ஆலயம் ஃபவுண்டேஷன்ஸ் லிமிட்டெட், காண்ஸ்ட்ரானிக்ஸ் இன்ஃப்ரா லிமிட்டெட், வைடூர்யா ஹோட்டல்ஸ்,ரத்னா லட்சுமி ஹோட்டல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.சந்திரபிரகாஷ் ஏ-4 ஆக இணைக்கப்பட்டுள்ளார். இதே நிறுவனங்களின் பங்குதாரர் மற்றும் இயக்குநர் ஆர்.சந்திரசேகர் ஏ-5 ஆக இணைக்கப்பட்டுள்ளார். இவர்கள் உட்பட 17 பேர் மீது முதல் தகவல் அறிக்கை புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு தரப்புகளிலும் அளித்த புகாரில் பொது சேவகராக இருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் கோவையின் கட்டுமானம் மற்றும் வழங்கல் விநியோகத்தில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தன்னைச் சார்ந்தவர்களுக்காக பெரிய அளவில் ஆதாயம் தேடியுள்ளார் என்றும் இந்தச் சார்ந்தவர்கள் பட்டியலில் அவரது சகோதரர் அன்பரசன் உட்பட அவர்களது நிறுவனங்களான P. செந்தில் & கோ., KCP இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட்., இன்விக்டா மெடிடெக் லிமிடெட் (இப்போது கான்ஸ்ட்ரோனிக்ஸ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது) இன்ப்ரா லிமிடெட், ஆலயம் பவுண்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்., கான்ஸ்ட்ரோமல் கூட்ஸ் பிரைவேட் லிமிடெட்., ஏசிஇ டெக் மெஷினரி கூறுகள் இந்தியா பிரைவேட் லிமிடெட், ரத்னா லட்சுமி ஹோட்டல்கள் (பி) லிமிடெட், வைதூர்யா ஹோட்டல்ஸ் (பி) லிமிடெட், ஏஆர் இஎஸ் பிஇ இன்ஃப்ரா (பி) லிமிடெட், ஸ்ரீ மகாகணபதி ஜூவல்லர்ஸ் (பி) லிமிடெட், ஆலம் கோல்ட் & டயமண்ட் (பி) லிமிடெட், வர்தன் உள்கட்டமைப்பு., கான்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா., மெட்ராஸ் இன்ஃப்ரா., ஓசூர் பில்டர்ஸ்., டூ லீஃப் மீடியா., எஸ்.பி. பில்டர்ஸ்.,சி.ஆர். கண்ட்ஸ்ரக்ஷன்ஸ் மற்றும் இவற்றில் தொடர்புடைய ராபர்ட் ராஜா , சந்திரபிரகாஷ் ஆகியோரும் இதில் அடக்கம். மேலும் இந்த நிறுவனங்களுக்கு டெண்டர் விடுவதற்காக முன்பின் தெரியாத சில அரசு அதிகாரிகள் ஏ-1 எஸ்.பி.வேலுமணியின் செல்வாக்கால் கண்மூடித்தனமாக சட்டத்தை மீறியுள்ளனர். அதனால் முன்னாள் அமைச்சர் உட்பட அனைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கோரப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

