• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கோவை ராமகிருஷ்ணா மிஷன் கல்வி நிலையத்தில் யோகா நிகழ்ச்சி: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு

BySeenu

Jun 21, 2024

சர்வதேச யோகா தினம், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை ராமகிருஷ்ணா மிஷன் கல்வி நிலையத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பு.

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் கல்வி நிலையத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் தகவல் ஒளிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் டாக்டர்.எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் 800-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர். அவர்களோடு இணைந்து அமைச்சர் யோகா பயிற்சி செய்தார்.இந்நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணா மிஷன் கல்வி நிலையத்தை சேர்ந்த சுவாமி கரிஸ்தானந்தா, பூதிதானந்தா, விரஹானந்தா மற்றும் உடற்கல்வித்துறை பேராசிரியர்கள் ஜெயபால் மற்றும் கிரிதரன் ஆகியோர் மத்திய அமைச்சர் அவர்களை வரவேற்று முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய மத்திய இணை அமைச்சர்,’நமது நாட்டின் உயரிய கலாச்சாரத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் விதமாக 2014 ஆம் ஆண்டு ஐநா சபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.127 நாடுகள் இந்த தீர்மானத்தில் ஒரு மனதாக கையெழுத்திட்டு 2015 ஆம் ஆண்டு முதல் ஜூன் 21ஆம் தேதி அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பத்தாவது சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இன்று நமது பாரத பிரதமர் அவர்கள் காஷ்மீரில் மாணவர்கள் மத்தியில் யோகா பயிற்சி செய்கிறார். இந்தியா முழுவதும் சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

யோகா என்பது நமது முன்னோர்கள் நமக்கு அளித்த கொடையாகும். யோகா பயிற்சியின் மூலம் மன தைரியம், மன ஒருமைப்பாடு, மனநலம் ஆகியவை கிடைக்கப்பெறும்.இந்த யோகா பயிற்சியை நாம் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும். குறிப்பாக வாழ்வியல் மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளான சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கும் சிறப்பான கலையாக யோகா உள்ளது.இந்த தினத்தில் மாணவர்களோடு சேர்ந்து யோகா பயிற்சி செய்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இளைஞர்கள் இந்த யோக கலையை வாழ்வின் அங்கமாக கடைபிடித்து, உறவினர்கள் நண்பர்கள் என அனைவரிடத்திலும் யோக பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். யோகா பயிற்சி செய்து உடல் நலம், மனநலம் பெற்று சிறப்பாக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்’ என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, யோகா பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்களுக்கு அமைச்சர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.