• Mon. Aug 3rd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

லாரி மோதி பெண் உயிரிழப்பு..,

BySeenu

May 31, 2025

கோவை, இடையர்பாளையம்- வடவள்ளி சாலையில் இன்று காலை பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். மோட்டார் சைக்கிள் அங்கு உள்ள சிக்னல் அருகில் கறிக்கோழி கடை அருகில் சென்ற போது அந்த வழியாக சென்ற லாரி உரசியது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் நிலை குலைந்து லாரியின் சக்கரத்திற்குள் விழுந்தார். அப்போது லாரியின் சக்கரம் அவர் தலையில் ஏறி இறங்கியது. இதில் ஹெல்மெட்டுடன் சேர்ந்து அவரது தலை நசுங்கி மூளை சிதறி ரத்தம் கொட்டியது. இதில் உடல் துடி, துடிக்க சிறிது நேரத்தில் அந்தப் பெண் இறந்தார்.

அப்போது அந்த வழியாக சென்றவர்கள் விபத்தில் சிக்கி பெண் ஒருவர் இறந்து கிடப்பதையும் லாரி ஒன்று சென்று கொண்டு இருப்பதையும் பார்த்தனர். உடனே அந்த லாரியை வழி மறித்து செல்ல விடாமல் சிறை பிடித்தனர். சம்பவம் குறித்து அறிந்ததும் விபத்து நடந்த பகுதிக்கு கோவை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்றனர்.

விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண் யார் என்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் பையில் இருந்த ஆதார் அடையாள அட்டை மூலம் அவரது பெயர் ஜாஸ்மின் ரூத் (வயது 39 ) வடவள்ளி அருகே உள்ள பொம்மனம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தீனதயாளன் என்பவரது மனைவி என தெரியவந்தது.

ஜாஸ்மின் ரூத் வடவள்ளியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை ஷோரூம் இல் ஊழியராக வேலை பார்த்து வந்து உள்ளார். தினமும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஷோரூம் இருக்கு சென்று வந்து உள்ளார். இந்த நிலையில் தான் இன்று காலை வேலைக்கு செல்லும் போது விபத்தில் சிக்கியது தெரிய வந்தது.

இதற்கு இடையே பொதுமக்கள் சிறை பிடித்த டிப்பர் லாரியை ஓட்டிச் சென்ற டிரைவர் கரூரை சேர்ந்த பெரியசாமி என தெரியவந்தது. அவர் விபத்தை நான் ஏற்படுத்தவில்லை என்றும் பொதுமக்கள் தவறுதலாக ரோட்டில் சென்ற தனது வாகனத்தை சிறை பிடித்து விட்டதாகவும் போலீசாரிடம் கூறி உள்ளார். இதனால் போலீசார் குழப்பம் அடைந்தனர். எனவே ஜாஸ்மின் மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி எது என்பதை கண்டுபிடிக்க அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.