சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் எதற்கு வசூலிக்கிறீர்கள்..? மாமல்லபுரத்தில் இருக்கும் குப்பையை பார்க்கவா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பக்கிங்காம் கால்வாய்பகுதி குப்பையைப் பிரிக்கும் இடமாக மாற்றப்பட்டு வருவதை எதிர்த்து கடந்த 2018 ஆம் வருடம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையின்போது குப்பைகளை அகற்றி மாமல்லபுரத்தை தூய்மையாக பராமரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமல்லாமல் மாமல்லபுரத்துக்கு வருகிற சுற்றுலாப் பயணிகளிடம் எதற்காக கட்டணம் வசூலிக்கிறீர்கள்..? அங்கிருக்கும் குப்பையைக் காணவா..? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் மாமல்லபுரம் சுற்றுலாத்தலம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்யாத அரசு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். அத்துடன் விதிகளை கடைபிடிக்காத அதிகாரிகள் மீது நடவடிககை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.