• Wed. Apr 24th, 2024

கிணற்றை காணவில்லை – பொதுமக்கள் புகார்

Byகிஷோர்

Dec 7, 2021

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசு கூட்டுறவு சொசைட்டி வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த கிணற்றை காணவில்லை என அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

சாத்தூர் பைபாஸ் அருகில் உள்ள வெம்பக்கோட்டை ரோட்டில் அரசு ஊரக தொழில் துறைக்கு சொந்தமான தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் கூட்டுறவு சொசைட்டி அலுவலகம் மற்றும் குடோன் வளாகம் உள்ளது. இந்த வளாகத்திற்குள் சுமார் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிணறு இருந்து வந்தது.

நல்ல நிலையில் இருந்து வந்த இந்த கிணறு தற்போது மாயமானதாக இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதி மக்களிடையே விசாரணை செய்தபோது அருகிலுள்ளவர்கள் இக்கிணற்றிணை மண் மற்றும் கட்டிட இடிபாட்டுகற்கள் கொண்டு இரவோடு இரவாக மூடி விட்டதாக தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அங்குள்ள சொசைட்டி அலுவலர்களை கேட்டால் பதில் கூற மறுக்கின்றனர்.

அரசு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நிலத்தில் உள்ள நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்வதற்கோ அல்லது அழிப்பதற்கோ யாருக்கும் அதிகாரம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் காமராஜபுரம், முனியசாமி கோவில் தெரு, தில்லைநகர், பெரியார் நகர், உள்ளிட்ட பல தெருக்களில் உள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளின் போர்வெல் மற்றும் குடிநீர் ஆதாரமாகவும் மழைக்காலத்தில் இப்பகுதி மழை நீர் வடிவதற்கும் இந்த கிணறு மூல ஆதாரமாக திகழ்ந்து வந்த நிலையில் யாருடைய அனுமதியும் பெறாமல் இக்கிணற்றினை மூடியதால் இந்த அலுவலக வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி தெப்பமாக காட்சியளிக்கிறது.

மேலும் அலுவலகம் மற்றும் குடோன் உள்ளும் மழைநீர் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ள தீப்பெட்டி பண்டல்கள் முழுவதும் நனைந்து முற்றிலும் வீணாக கூடிய நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.

தற்பொழுது இந்த கிணறு இருந்திருந்தால் இப்பகுதியில் தேங்கிய மழை நீர் அனைத்தும் கிணற்றினுள் செல்ல ஏதுவாக இருக்கும். இப்பகுதி கோடைகாலத்தில் பெரும் வறட்சியையும் குடிநீர் தட்டுப்பாட்டினையும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று இப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.

யாரோ ஒரு சிலர் செய்த தவறினால் இப்பகுதி மக்கள் சிரமப்படுவது கண்டனத்திற்குரியது. மேலும் அரசு அலுவலக வளாகத்திற்குள் இருக்கும் கிணற்றினை அனுமதியின்றி இவ்வாறு மூடியது மிகவும் தண்டனைக்குரிய குற்றமாகும். இதுகுறித்து அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் அந்த கிணற்றினை தூர்வாரி மக்களின் பயன்பாட்டிற்கும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கும் வழிவகை செய்து கொடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *