கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறினார்.
தமிழக வனத்துறை கா. ராமச்சந்திரன் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு ரப்பர் கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து அவர் அரசு ரப்பர் கழக தொழிற்சங்க நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊதிய உயர்வு குறித்த இப்பிரச்சினை குறித்து விவாதித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் ரப்பர் கழக அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வனத்துறை அமைச்சர் கூறுகையில் ” கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் கலகம் கடந்த ஆண்டுகளில் நஷ்டத்தில் இயங்கி வந்தது தற்போது லாபமும் இன்றி நஷ்டமும் இன்றி இயங்குகிறது.
இதனை லாபகரமாக மாற்ற தொழிலாளர்கள் ஒத்துழைத்தால் தான் முடியும்.ஏற்கனவே தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த பிரச்சனை பேச்சுவார்த்தையில் இருந்து வருகிறது. இதற்கும் தீர்வு எட்டப்படவில்லை. தொழிற்சங்க நிர்வாகிகள் அதிகாரிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த பட்ட பின்னர் ஊதிய உயர்வு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும். தொடர்ந்து யானைகளின் உயிரிழப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராமச்சந்திரன் யானைகளின் இழப்பை கட்டுப்படுத்த மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.