• Mon. Feb 2nd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

திமுகவிற்கு எதிராக விருதுநகரில் அதிமுகவினர் போராட்டம்!

ADMK

சட்டப்பேரவையில் இன்று ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலை கழகத்துடன் இணைக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். மசோதாவின் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்த அதிமுகவினர், திமுகவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பிய படியே அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் கலைவாணர் அரங்கம் அமைந்துள்ள வாலாஜா சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவரான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADMK

உடனடியாக அங்கு குவிக்கப்பட்ட காவல்துறையினர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இச்செய்தி காட்டுத்தீ போல் தமிழகம் முழுவதும் பரவியது. ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாகவும், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைதைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் இறங்கினர்.

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே 300க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கையில் கட்சிக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். இதில், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் கலாநிதி , மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் ஆர்.எஸ்.விஜயகுமார், நகர கழக செயலாளர் முகம்மது நெய்னார், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.கண்ணன், கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தர்மலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.