இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி திருநாள் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பல வண்ணங்கள் மற்றும் பல வடிவங்களில் உள்ள விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி தினத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா களையிழந்து காணப்பட்ட நிலையில் இன்று மீண்டும் உற்சாகமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “வேழ முகத்து விநாயகரைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்” என்ற வாக்கிற்கு இணங்க மக்கள் அனைவரும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி, வாழ்வில் நிறைந்த செல்வமும், நீண்ட ஆயுளும் பெற்று நலமுடன் வாழ்ந்திட எனது விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை ஒரு நல்ல குறிப்போடு வாழ்த்தியுள்ளார்.