• Sat. May 4th, 2024

மதுரை டிராபிக் போலீசாருக்கு ‘வெரிகோஸ் வெயின்’ சிறப்பு மருத்துவ முகாம்..,மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் ஏற்பாடு..!

ByKalamegam Viswanathan

Oct 17, 2023

மதுரையில் உள்ள அனைத்து டிராபிக் போலீசாருக்கும் ‘வெரிகோஸ் வெயின்’ என்னும் ‘நரம்பு சுருட்டல் நோய்’க்கான சிறப்பு மருத்துவ முகாம் நவம்பர் இரண்டாவது வாரத்தில் நடத்தப்பட உள்ளதாக ‘மதுரை ஜல்லிக்கட்டு’ ரோட்டரி சங்கம் தெரிவித்துள்ளது.

மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத்தின் சிறப்புக் கூட்டம் யூனியன் கிளப்பில் ‘நண்பர்கள் தினமாக’ கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத்தலைவர் நெல்லை பாலு தலைமை தாங்கினார். பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் சண்முக. திருக்குமரன் ‘எந்நாளும் நன்நாளே!’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் மூத்த ரோட்டரி உறுப்பினர் வினோதன், ‘ரோட்டரியும் சமூக பங்களிப்பும்’ என்ற தலைப்பில் பேசினார். செயலாளர் முன்னாள் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் வருங்கால திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

நிகழ்வில் ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க ஆலோசகர் பி.எல்.அழகப்பன், சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., எம்.வி.கருப்பையா, ‘ஐ கேட்ச்’ டி.சண்முகம், எழுத்தாளர் ‘அத்வி மீடியா’ ஆதவன், ஜிஎன்கே., சிட்ஸ் அதிபர் ஜி.நவநீதகிருஷ்ணன், ‘விநாயகா இம்பெக்ஸ்’ தொழிலதிபர் மகேந்திரன், வழக்கறிஞர் கார்த்திக், ஆடிட்டர் சேது மாதவா, பாலகுரு உட்பட 50க்கும் மேற்பட்ட ரோட்டரி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், “பணி நேரத்தில் பெரும்பாலும் நின்று கொண்டே வேலை செய்யும் டிராபிக் போலீசார்களுக்கு வெரிகோஸ் வெயின் எனப்படும் நரம்பு சுருட்டல் நோய் தவிர்க்க இயலாததாக இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. எனவே, அவர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, டிராபிக் போலீசாருக்கு ‘ஆப்டிமம் ஹெல்த் கேர்’ நிறுவனத்தின் உதவியுடன் ‘வெரிகோஸ் சிறப்பு மருத்துவ முகாம்’ நவம்பர் இரண்டாவது வாரத்தில் நடத்துவது” என்று தீர்மானிக்கப்பட்டது.

மேலும், “மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள சுதந்திரப் போராட்டத்தோடு தொடர்புடைய வரலாற்று சிறப்புமிக்க ‘குமரப்பா குடிலை’ சரி செய்து கொடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு புத்தடைகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்ட முடிவில் பொருளாளர் எஸ்.கதிரவன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *