• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

மதுரையில் இந்தியன் ஆயில் எண்ணெய் கிடங்கு அருகே குப்பைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் ..,

ByKalamegam Viswanathan

Jun 17, 2026

மதுரை மாவட்டம் கப்பலூர் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) நிறுவனத்தின் எண்ணெய் சேமிப்பு கிடங்கு அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ள இந்த எண்ணெய் சேமிப்பு கிடங்கின் பின்புற காலி இடத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகள் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கின. தீ வேகமாக பரவியதால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது.

அதே நேரத்தில் மதுரையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் அந்த வழியாக கடந்து சென்றதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவியது.

தகவலறிந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும், சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் தாமதமாக வந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எரிந்த தீ பின்னர் தானாகவே அணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எண்ணெய் சேமிப்பு கிடங்கு போன்ற மிக முக்கியமான மற்றும் அபாயகரமான பகுதிக்கு அருகே தீ விபத்து ஏற்பட்டது பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கக் கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, கிடங்கை ஒட்டியுள்ள காலி இடங்களில் குவிந்துள்ள குப்பைகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை உடனடியாக அகற்றுவதோடு, தீ வைத்த மர்ம நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.