தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் இன்று(1.12.2025) காலை அரசு இராசாசி மருத்துவமனையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் போக்குவரத்துத்துறை அமைச்சர்
கூறியதாவது : இரு பேருந்துகளையும் இயக்கியவர்கள் ஒப்பந்த ஓட்டுநர்கள் அல்ல, அரசின் ஓட்டுநர்கள் தான். கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற பெரிய கோர விபத்து இது. இந்த விபத்தில் என்ன குற்றம் நடந்துள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். உரிய அனுபவமுள்ள, தகுதியான ஓட்டுநர்கள் தான் அரசு பேருந்துகளுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். எதிர்க்கட்சிகள் ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக குற்றம் சாட்டுகிறார்கள்.

இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருப்பதற்காக ஓட்டுநர்கள், நடத்துபவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சிகளை இன்னும் அதிகரிப்போம்.
நீண்ட தூர பேருந்துகள் பல வருடமாக இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் அனுபவமுள்ள ஓட்டுநர்களை தான் பயன்படுத்தி வருகிறோம். இந்த விபத்து ஏதோ ஒரு அஜாக்கிரதை காரணமாக நடைபெற்றிருக்கிறது. ஓட்டுநர்களுக்கு பணிச்சுமை இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்வோம் என, தெரிவித்தார். இந்நிகழ்வின் போது, மதுரை மேலாண் இயக்குநர் சரவணன் கும்பகோணம் மேலாண் இயக்குநர் தசரதன் அரசு மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.








