• Tue. Apr 7th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

போக்குவரத்து கழக நுகர்வோர் கூட்டம்

உதகையில் போக்குவரத்து கழக நுகர்வோர் கூட்டம் நடைபெற்றது.
தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு நுகர்வோர் கூட்டம் பொதுமேலாளர் கூட்ட அரங்கில் நடைபெற்றது. துணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். பொது மேலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன் செயலாளர் பாலகிருஷ்ணன், புளுமவுண்டன் நுகர்வோர் சங்க தலைவர் நாகராஜன், உதகை நுகர்வோர் சங்க நிர்வாகி ஆகியோர் கலந்து கொண்டு பேசும்போது, பல பேருந்துகள் உடைந்த நிலையில் பழையனவாக உள்ளன மாற்ற வேண்டும். பந்தலூர் கூடலூர் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும். பந்தலூர் நேரகாப்பாளர் நியமித்து மற்றும் சக்கரம் வழங்க வேண்டும் கூடலூர் பாடந்தொரை மேல்கூடலூர் வரை நகர பேருந்துகள் இயக்க வேண்டும் கோத்தகிரி பேருந்து நிலையம் பேருந்து கால அட்டவணைகள் வைக்க வேண்டும். ஓட்டுநர் நடத்துநர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதை கூடுமானவரை தடுக்க ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். வழித்தடங்கள் அறிவிப்புகள் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளவற்றை சரி செய்ய வேண்டும். குந்தலாடி பொன்னானி வழித்தடத்தில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும். உதகை தலைகுந்தா பேருந்து சேரிங்கிராஸ் பேருந்து நிலையம் வழியாகவும் இயக்க வேண்டும். உதகை கைகாட்டி வரை காலை மாலை நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும். பேருந்துகள் குப்பைகளை சுத்தப்படுத்தி வெளியே இயக்க வேண்டும். ஜன்னல் கண்ணாடிகள் சரியாக திறக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இதுகுறித்து பதில் அளித்த பொது மேலாளர் நடராஜன் பேசும்போது மக்கள் நலன் கருதி போக்குவரத்து கழக சேவை அடிப்படையில் இயக்க படுகின்றது. ஆண்டுக்கு 100 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டாலும் மக்களுக்கு சேவை வழங்க பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதனை மக்கள் சரியாக பயன்படுத்திகொள்ள வேண்டும். சில பேருந்துகள் சொற்ப வருமானத்தில் இயக்கப்படுவதும் இன்னும் இழப்பை அதிகபடுத்துகின்றது. தற்போதைய வருவாயில் 90 சதவீதத்திற்கு மேல் டீசலுக்கு செலவிடப்படுகிறது. தற்போது வருவாய் குறைவான வழித்தடம் மற்றும் நடைகள் குறித்து கணக்கெடுத்து மாற்று முறைகளில் மக்களுக்கு பயன்தரும் வகையில் பேருந்துகள் இயக்க முயற்சிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுகின்றோம். அதன் அடிப்படையில் புதிய வழித்தடங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசு மூலம் புதிய பேருந்துகள் வழங்கப்பட உள்ளது அதுபோல் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 16 முதல் 20 பேருந்துகள் நீலகிரி மாவட்ட பயன்பாட்டிற்கு வாங்க உள்ளோம். வரும் ஏப்ரல் மாதத்தில் புதிய பேருந்துகள் வந்துவிடும். பழைய பேருந்துகள் தற்போது பேருந்துகள் பராமரிப்புக்கு முக்கியதுவம் அளிக்கப்பட்டு வருகிறது. குறைகள் இருப்பின் அவற்றை விரைவில் சரி செய்து தரப்படும் என்றார். மக்கள் அரசு பேருந்துகளை அதிகம் பயன்படுத்தும்போது கூடுதல் பேருந்துகள் இயக்க முடியும் என்றார். உதகை, கூடலூர், குன்னூர், கோத்தகிரி, மேட்டுப்பாளையம் போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் கலந்து கொண்டனர். உதவி மேலாளர் மாசிலாமணி நன்றி கூறினார்.