மதுரை மாவட்டம் சோழவந்தானில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஜெனகைமாரியம்மன் கோவில் பெரிய கடை வீதி மார்க்கெட் ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வட்ட பிள்ளையார் கோவில் பகுதி ஆகிய இடங்களில் தினசரி போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

வாகனங்கள் வந்து செல்வதை முறைப்படுத்தாததாலயே இதுபோன்ற போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக பொதுமக்கள் வர்த்தகர்கள் கூறுகின்றனர். ஆகையால் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க ஒரு வழி பாதையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். முக்கியமாக சோழவந்தான் பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறி செல்லும் பேருந்துகள் அனைத்தும் மார்க்கெட் ரோடு திரௌபதி அம்மன் கோவில் வழியாக மதுரை திருமங்கலம் சமயநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லுமாறும் வெளியூரில் இருந்து சோழவந்தான் நகருக்குள் வரும் வாகனங்கள் வேப்பமர ஸ்டாப் வழியாக மாரியம்மன் கோவில் பகுதியில் திரும்பி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வழியாகவும் வட்ட பிள்ளையார் கோவில் சென்று அங்கிருந்து பேருந்து நிலையம் செல்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தற்போது வாகனங்கள் அனைத்து பகுதிகளிலும் இருவழி பாதையாக பயன்படுத்தி வருவதாலேயே போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக கூறும் பொதுமக்கள் வர்த்தகர்கள் அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் வந்து மார்க்கெட் ரோடு வழியாக வெளியேறி செல்லும் வகையில் ஒரு வழி பாதையாக மாற்ற வேண்டும். சண்முகானந்த பவான் உணவகம் அருகில் இதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும். தினசரி அந்த இடத்தில் காவலர்கள் இருந்து ஒரு வழி பாதையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும் காவல்துறையின் அறிவிப்பை மீறும் வாகனங்களுக்கு உடனடி ஆபராதம் விதிக்க வேண்டும். மேலும் வர்த்தக நிறுவனங்கள் முன்பு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுக்க வேண்டும் என கூறுகின்றனர். இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் மற்றும் துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் வர்த்தகர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்





