திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் ஐந்து தங்கம் உட்பட 16 பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய மாணவ, மாணவிக்களுக்கு கோவை சிலம்ப கமிட்டி சார்பாக உற்சாக வரவேற்பு நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம்,திருநின்றவூர் பகுதியில் தமிழ்நாடு சிலம்ப கமிட்டி மற்றும் திருவள்ளூர் மாவட்ட சிலம்ப கமிட்டி சார்பாக ஆறாம் ஆண்டு மாநில அளவிலான ஆண் பெண் இருபாலருக்கான சிலம்ப போட்டி ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
திருவள்ளூர் சிலம்ப கமிட்டி நிர்வாகிகள் ராஜா,ரஜினி,பாஸ்கர் மற்றும் குழுவினர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற, இதில் கோவை, மதுரை, சென்னை, கன்னியாகுமரி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

வயது அடிப்படையில் ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பம்,வாள் மற்றும் மான்கொம்பு வீச்சு,சுருள் வாள் வீச்சு என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் கோவையில் இருந்து கோவை மாவட்ட சிலம்ப கமிட்டி சார்பாக ஆறு வயது முதல் 17 வயது வரையிலான மாணவ,மாணவிகள் 25 பேர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இதில் பல்வேறு பிரிவுகளில் கோவையில் இருந்து கலந்து கொண்டவர்களில் 5 தங்கம்,7 வெள்ளி 4 வெண்கலம் என 16 பதக்கங்கள் வென்று அசத்தினர்.
இதனை தொடர்ந்து கோவை திரும்பிய வெற்றியாளர்களுக்கு கோவை மாவட்ட சிலம்ப கமிட்டி சார்பாக உற்சாக வரவேற்பு அளித்து பாராட்டு விழா நடைபெற்றது.
இந்திய சிலம்ப சங்கத்தின் பொது செயலாளர் தியாகு நாகராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி தலைவர் பாலமுருகன்,செயலாளர் அர்ஜூன், பொருளாளர் சிவமுருகன் இந்திய சிலம்ப சங்கத்தின் தொழில் நுட்ப இயக்குனர் பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பதக்கம் வென்ற மாணவ, மாணவிகளுக்கு மாலைகள் அணிவித்து சால்வை போர்த்தியும் வாழ்த்து தெரிவித்தனர்.