மதுரை மாநகர் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு பகல் பாராது மழை பெய்து வருகிறது. இதனால் பல சாலைகள் மழை நீர் செல்ல வழி இல்லாமல் குளம் போல சாலையிலே நீர் தேங்கி மேடு பள்ளங்கள் இருப்பது கூட தெரியாமல் உள்ளது. குறிப்பாக மதுரை – திருப்பரங்குன்றம் சாலை பசுமலை முதல் பழங்காநத்தம் ரவுண்டான வரையிலான சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. பல இடங்களில் வளங்கள் இருப்பதால், அதில் மழை நீர் தேங்கி குளம் போல உள்ளது. இதில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர், கீழே விழுந்து காயத்துடன் செல்கின்றனர். மேலும் போக்குவரத்து நெருசலும் ஏற்படுகிறது. மழை நீர் செல்வதற்கான வடிகால் வாய்க்காலானது எந்த இடத்திலேயும் தூர்வாரப்படாமல் இருப்பதாலேயே மழைநீர் ஆனது சாலையிலேயே தேங்கியுள்ளது. மாநகராட்சி கழிவுநீர் அள்ளும் வாகனம் மூலமாக சாலையில் இருக்கும் நீரை எடுத்து விட்டு செல்கின்றனர். எனினும் எடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் மழை வந்து விடுவதால், மீண்டும் அதே இடத்தில் நீர் தேங்கிறது. நிரந்தர தீர்வு காண வழியில்லாமல் தவித்து வருவதாக வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டு முன் வைக்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் சாலையில் நீர் தேங்காமல் நிற்கவும் சாலையில் உள்ள பள்ளங்களை தற்காலிகமாவது சரி செய்து வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காமல் உயிர்பலி ஆகும் முன் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைவரின் கோரிக்கையாகவே உள்ளது. மாநகராட்சி தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா.