காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு செல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள அருட்சக்தி மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டு திருவிழாவையொட்டி இன்று தீமிதி உற்சவம் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு காலை முதலே சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து காந்தவராயன் கதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இன்று மாலை நடைபெற்ற தீமிதி உற்சவத்தில் விரதமிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்கள் “அம்மன் அரோகரா” என முழக்கமிட்டு தீமிதி நிகழ்வில் கலந்து கொண்டது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள் சக்தி மாரியம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திருநள்ளாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். தீமிதி உற்சவம் அமைதியான முறையிலும் பக்தி நிறைந்த சூழலிலும் சிறப்பாக நடைபெற்றது.




