ரெட் அலர்ட் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேரோடு சாய்ந்த மே ஃப்ளவர் மரம் : அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் – அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் !!!
கோவை மாவட்டத்திற்கு இன்று அதிக கன மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கேரளத்தில் தொடங்கி உள்ள தென் மேற்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவி உள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையொட்டி உள்ள மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் வெளியிட்ட வானிலை அறிக்கையில், நீலகிரி மற்றும் கோவையில் மலையை ஒட்டிய பகுதிகளில் நேற்று முன் தினம் முதல் அதி கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வருகிறது.
ஓரிரு இடங்களில் சூறைக்காற்று வேகமாக வீசி வருகிறது.
இந்நிலையில் கோவையில் இன்றும் காலை முதல் ஒரு சில இடங்களில் மிதமான முதல் கன மழை பெய்து வருகிறது. மேலும் அவ்வப்போது சூறைக்காற்றும் வீசி வருவதால், தற்பொழுது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மே பிளவர் மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. அதன் அருகே வாகன நிறுத்துமிடம் உள்ளது. அப்பகுதியில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்நிலையில் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழுந்த அந்த மே ஃப்ளவர் மரத்தை உடனடியாக அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



