மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர் வாகனங்கள் போதிய அளவில் இல்லாததால் தினசரி 18 வார்டுகளில் குப்பைகள் மலை போல் தேங்கி கிடப்பதாக சம்பந்தப்பட்ட வார்டு பொதுமக்கள் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

பேரூராட்சி 7வது வார்டு முதலியார் கோட்டை பகுதியில் சோழவந்தான் கருப்பட்டி சாலையில் ஆங்காங்கே குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடக்கிறது. தற்போது ஆடி மாதம் காற்று அதிகம் வீசுவதால் குப்பைகள் பறந்து சாலைகளில் பரவி கிடக்கிறது. இதனால் சாலையில் செல்பவர்கள் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். பேரூராட்சி அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்தால் குப்பைகள் அள்ளுவதற்கு போதுமான அளவில் வாகனங்கள் இல்லாததால் பணிகளை செய்ய முடியவில்லை என கூறுகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு சோழவந்தான் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கருப்பையா எம்எல்ஏவிடம் இது குறித்து துப்புரவு பணியாளர் ஒருவர் புகாராக தெரிவித்து இருந்தார். அதன் பிறகும் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்குவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். குப்பைகள் தேக்கம் காரணமாக சுகாதார கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் கூறுகின்றனர். 5வது வார்டுக்கு உட்பட்ட அரசு மருத்துவமனை பகுதிகளில் குப்பைகள் தேக்கம் காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

ஆகையால் பேரூராட்சி அதிகாரிகள் மாவட்ட ஆட்சியருக்கு வாகனங்கள் பற்றாக்குறை குறித்து தகவல் தெரிவித்து கூடுதல் வாகனங்களை தயார் செய்து குப்பைகள் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




