மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளது பொம்மிநாயக்கன்பட்டி கிராமம் இங்குள்ள முத்தாலம்மன் கோவில் ஜல்லிக்கட்டு காளை சண்டியர் மரணம் அடைந்த நிலையில் அதற்கு கிராம மக்கள் கரகாட்டம் ஒயிலாட்டம் மேளதாளம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இறந்த ஜல்லிக்கட்டு காளை சண்டியருக்கு ரூபாய் நோட்டுக்களால் ஆன மாலை ரோஜா மாலை உள்ளிட்ட பல்வேறு வகையான மாலை அணிவித்து கிராம மந்தையில் வைக்கப்பட்டு கரகாட்டம் ஒயிலாட்டம் நடைபெற்றது. கிராம பெண்கள் மற்றும் வாலிபர்கள் கண்ணீர் மல்க தங்களது கிராம தேவதையான ஜல்லிக்கட்டு காளை சண்டியருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர் அலங்காநல்லூர் பாலமேடு அவனியாபுரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வாடி வாசலில் அவிழ்க்கப்பட்டு தங்க காசு சைக்கிள் பீரோ பல்வேறு பரிசு பொருட்களை வெற்றி பெற்று வந்த சண்டியர் வயது மூப்பு காரணமாக இறந்தது கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இருந்தும் தங்கள் வீட்டில் உள்ள ஒருவர் இறந்தது போல் பாவித்து அனைத்து மரியாதைகளையும் செய்து ஜல்லிக்கட்டு காளைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைக்கு பிளக்ஸ் பேனர்கள் வைத்து தங்களது அஞ்சலியை செலுத்தினர் கிராம மக்கள் அனைவரும் தங்களின் அன்றாட பணிகளை தவிர்த்து கிராம மந்தையில் ஒன்று கூடி ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இறுதி மரியாதை செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



