கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சர்வதேச முதலியார் மற்றும் பிள்ளைமார் சங்கத்தின் மாதர் சங்க துவக்க விழா குமரியில் நடந்தது.
இதில் மாவட்டம் மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த அமைப்பு துவக்க விழாவுக்கு பின்னர் எத்திராஜ் கல்வி குழுமங்களின் தலைவர் வி.எம்.முரளிதரன் செய்தியாளர்களுக்கு பேட்டியில், “தமிழகத்தில் மேல்தட்டு, கீழ்த்தட்டு என பாகுபாடு இருப்பதை களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளாதார ரீதியாக சில சமூதாய மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசு உள் ஒதுக்கீட்டின்படி 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினால் அவர்கள் கல்வியில் மேம்பட வாய்ப்பு ஏற்படும் என்று கூறினார்.
இந்த அமைப்பின் தலைவர் முக்கிய கிருஷ்ணபிள்ளை செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகம் முழுவதும் முதலியார் மற்றும் பிள்ளைமார் சமுதாயத்தை சார்ந்த 1 1/4 கோடி பேர் உள்ளதாகவும், கொரோனா தடை உத்தரவு காலங்களில் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் தொழிலின்றி பல்வேறு பாதிப்புகளை சந்தித்துள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசு உதவி செய்தால் தான் மீண்டும் தங்களது பழைய நிலையை அவர்கள் அடைய வாய்ப்பாக அமையும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் ரகுராம் துணைத் தலைவர் திரு.பொன்ராஜ், ரவி பிள்ளை உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.