• Fri. Apr 26th, 2024

பாரம்பர்ய விவசாயத்தை பற்றிய படம் கடைசி விவசாயி

காக்காமுட்டை மணிகண்டன் இயக்கியுள்ள கடைசி விவசாயி படம் நாளை(11.02.2022) வெளியாகவுள்ளது. பட வெளியீட்டுக்கு முன்பே நேற்று முன்தினம் சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது விவசாயம் இன்றி உலகம் இயங்க முடியாது எல்லா தொழிலுக்கும் அடிப்படை ஆதாரம் விவசாயம் கடைசி விவசாயி என பெயர் வைத்திருக்கிறாரே என்ற சந்தேகத்துடன் இயக்குனர் மணிகண்டனிடம் பேசியபோது,


விவசாயத்தை ஒரு தொழிலாகப் பார்க்காமல், ஒரு வாழ்வியலாகப் பார்க்க வேண்டும். அதில் எவ்வளவு பேர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், அது எப்படி இருக்கிறது என்பது தான் கதையின் கரு.

ஒரு கிராமத்தில் நல்ல விசயங்களே நடக்காமல் இருக்கிறது. குலதெய்வம் கும்பிடாமல் இருக்கிறது என்று அதை கும்பிட ஊர் தயாராகும். அதை கும்பிடும் வழிமுறைக்கு அனைவரும் ஒரு மரக்கா நெல் கொடுக்க (ஐந்து கிலோ)வேண்டும்.

அப்போது தான் அவர்களுக்குத் தெரியவரும், அந்த ஊரில் யாரும் விவசாயம் செய்யவில்லை என்று.


இருபது வருடங்களாக கிராம தெய்வத்தைக் கும்பிடவில்லை என்பதால் யாருக்குமே இந்த நெல் காணிக்கை என்பது நினைவில் இருக்காது. ஆனால் அந்த ஊரில் 85 வயதான பெரியவர் ஒருவர் தனது நிலத்தில் தனக்கான விவசாயத்தை மட்டும் பாரம்பர்ய முறைப்படி செய்து வருவார் அவருக்குக் காதும் அவ்வளவாகக் கேட்காது.

அவர் உண்டு, தோட்டமுண்டு என்று இருப்பார். அந்த ஊரே அவரிடம் போய் நெல் கேட்கும். அவர் என்ன செய்கிறார், குலதெய்வக் கோயில் கும்பிடுவது எப்படி மாறியுள்ளது, வழிபாட்டு முறையில் நமக்கு இருக்கும் நம்பிக்கை ஆகிய அனைத்தும் திரைக்கதையாக இருக்கும்.

கிராமத்தில் ஒரு துக்கத்தைச் சொன்னால் கூட நையாண்டியாகச் சொல்வார்கள். ஆகையால் படத்தில் காமெடியை தவிர்க்கவே முடியாது. படம் முழுக்க காமெடி இருந்து கொண்டே இருக்கும். நாகரீகம் வளர்வதற்கு முன்னாள் இருந்த மனிதர்களும், நாகரீகத்தில் உச்சத்தில் இருக்கும் மனிதர்களும் வரும் போது எப்படி காமெடி இல்லாமல் இருக்கும். அதே போல், அந்த உரையாடல் நம்மை யோசிக்க வைக்கும் விதமாகவும் இருக்கும்.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சுற்றி சுமார் 16 கிராமங்களில் படமாக்கியிருக்கேன். அங்கிருக்கும் விவசாய முறை ரொம்ப பழசு. நம்ம தமிழர்களோட விவசாய முறையை இன்னும் கையில் வைத்திருப்பது கரிசல்காட்டு விவசாயிகள் தான். அவர்களைக் கடைசி விவசாயிகளாகத் தான் பார்க்கிறேன்.

இந்தப் படத்தின் தலைப்பைப் பார்த்து விவசாயம் முடிந்துவிடப் போகிறதோ என்று நினைத்துவிடாதீர்கள்.கிராமத்தில் இருப்பவர்களையே நடிக்க வைத்துள்ளேன். நேரடி ஒலிப்பதிவு என்பதால் அவர்களுடைய குரலிலேயே முழுப்படமும் இருக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *