• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

ஆட்சியர் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி

சேலம் தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். தோட்டத்திற்கு செல்லும் வழியை பயன்படுத்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் சாதியபாகுபாடு பார்த்து எதிர்ப்பதாக குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி, கொக்காங்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி குமார். இவர் தனது தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தங்கவேலு மற்றும் கொக்கடிவேலு ஆகியோர் உயர்சாதி பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் சாதிபாகுபாடு பார்த்து இவரது தோட்டத்திற்கு செல்லும் வழியை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவிப்பதாக குமார் குற்றம் சாட்டினார்.
இந்தநிலையில் குமார் தனது தாய் மாரியம்மாள், மற்றும் பள்ளிக்கு செல்லும் மகன் தரணீஷ், மகள் தர்சினி ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அங்கு தங்கள் மீது மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு அனைவரும் தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அவர்களின் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து குமார் கூறும்போது, தனது தோட்டத்திற்கு செல்லும் வழியில் தனக்கு சட்டரீதியாக பாத்தியம் இருந்தும், சாதி பாகுபாடு காரணமாக அதனை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், இது தொடர்பாக முதலமைச்சர் மற்றும் தம்மம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்தார்.